கச்சா எண்ணெய் பற்றாக்குறையை சமாளிக்க மாற்று வழி.....!!


சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் தேவை அதிகரித்துள்ளது. மக்கள் மற்றும் வாகனப் பெருக்கம் காரணமாக பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் பயன்பாடு கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது.

எண்ணெய் உற்பத்தி நாடுகள் உற்பத்தியை குறைத்து, கச்சா எண்ணெயின் விலையை ஏற்றியுள்ளன. உள்நாட்டு உற்பத்தி மிகவும் குறைவாக உள்ள நிலையில், எரிபொருட்களுக்காக வெளிநாடுகளை எதிர்பார்க்க வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது. இப்பிரச்னை அடுத்த 20 ஆண்டுகளில் விஸ்வரூபம் எடுக்கும். நாட்டின் ஒட்டுமொத்த எரிபொருள் தேவையில் 70 சதவீதம் இறக்குமதி செய்யப்படுகிறது. அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் இது 85 சதவீதமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச அளவில் தினசரி 8.6 கோடி பேரல் என்ற அளவில் கச்சா எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது.

வாகனங்களின் எண்ணிக்கையும், கச்சா எண்ணெய் பயன்பாடு அதிகரிப்பையும் கணக்கில் கொண்டு பார்க்கும் போது, அடுத்த ஆண்டில் இது 8.9 கோடி பேரலாகவும், இரண்டு ஆண்டுகளில் 10.3 கோடி பேரலாகவும் அதிகரிக்கும் என பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர். சர்வதேச அளவில் செலவிடப்படும் கச்சா எண்ணெயில் 3.5 சதவீதம் இந்தியா பயன்படுத்துகிறது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் இது 5 முதல் 6 சதவீதம் என்று அதிகரிக்கும். கச்சா எண்ணெய் தேவையில் 1 சதவீதம் அதிகரித்தால், எண்ணெயின் விலை 20 சதவீதம் அதிகரிக்கிறது. இதனால், அடுத்த இரண்டு ஆண்டுகளில் தற்போது ஒரு பேரல் 143 அமெரிக்க டாலர் என்ற விலையில் உள்ள கச்சா எண்ணெய், 200 அமெரிக்க டாலர்கள் வரை அதிகரிக்கலாம் என உலக வங்கி எச்சரித்துள்ளது.

இதுபோன்ற ஒரு சூழ்நிலையில், நாட்டின் எரிபொருள் தேவையை குறைக்க வேண்டியது அவசியமாகிறது. வாகன போக்குவரத்திற்கு அதிகமான அளவில் எரிபொருள் செலவிடப்படுகிறது. குறிப்பாக, சரக்கு போக்குவரத்திற்கு கூடுதல் எரிபொருள் செலவு செய்யப்படுகிறது. இந்நிலையில், மாற்று ஏற்பாடுகள் மூலம் நாட்டின் சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்தை சீர் செய்தால் மட்டுமே, அடுத்த சில ஆண்டுகளில் ஏற்படப் போகும் கச்சா எண்ணெய் பற்றாக்குறையை சமாளிக்க முடியும். இதற்கு நாட்டில் உள்ள நதிகளை இணைப்பதும், அவற்றின் மூலம் நீர் வழிப் போக்குவரத்தை ஏற்படுத்துவதும் மட்டுமே ஒரே தீர்வாக அமையும்.

நாட்டின் வட பகுதியிலும், மத்தியிலும் ஜீவநதிகள் உள்ளன. மழை காலங்களில் இவற்றில் பெரும் வெள்ளம் ஏற்படுகிறது. இதனால், கிடைக்கும் நீர் வீணாக ஓடி கடலில் கலக்கிறது. இந்நிலையில், தேசிய அளவில் நதிகளை இணைப்பதன் மூலம், கடலில் வீணாகும் மழை நீரை சேமித்து, பாசனம் மற்றும் குடிநீர் பயன்பாட்டிற்கு பயன்படுத்த முடியும். மேலும், நதிகளை இணைக்கும் கால்வாய்கள் மூலம் நீர் வழிப் போக்குவரத்தை செயல்படுத்த முடியும். மிகவும் பிரம்மாண்டமாக தோற்றமளிக்கும் இத்திட்டம், தமிழகத்தை போல ஒவ்வொரு மாநிலமும் செயல்படுத்த துவங்கினால் முடிக்கக்கூடிய ஒன்று தான் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

"நேஷனல் வாட்டர் வேஸ்ட் பிராஜெக்ட்' என்ற பெயரில் பேராசிரியர் ஏ.சி.காமராஜ் தலைமையிலான ஒரு வல்லுனர் குழு இந்திய நதிகளை இணைப்பது குறித்து ஒரு ஆய்வு நடத்தியுள்ளது. இதில், நதிநீர் இணைப்பு என்பது மூன்று கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை, 1. இமயமலைநீர்வழி, 2.மத்திய நீர்வழி, 3. தெற்கு நீர்வழி . வற்றாத ஜீவநதிகளான கங்கை, பிரம்மபுத்திரா ஆகிய நதிகளை கொண்ட இமயமலை நீர்வழி என்பது நான்காயிரத்து 500 கி.மீ., நீளம் கொண்டது. கங்கையின் தென்பகுதி மகாநதி, நர்மதா மற்றும் தபதி ஆகிய நதிகளை கொண்ட மத்திய நீர்வழி ஐந்தாயிரத்து 750 கி.மீ., மற்றும் கோதாவரி, கிருஷ்ணா, காவிரி ஆகிய நதிகள் கொண்ட தெற்கு நீர்வழி என்பது நான்காயிரத்து 650 கி.மீ., நீளம் கொண்டது.

பொதுவாக, முந்தைய நதிநீர் இணைப்பு என்ற திட்டத்திற்கு பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. தங்கள் மாநிலங்களில் ஓடும் நதிகளை பங்கு போடுவது என்பதற்கு அவை ஒத்துக் கொள்ளவில்லை. மேலும், இவ்வளவு பெரிய திட்டத்திற்கு நிதி ஒதுக்குவது என்பதும் ஒரு சவாலான பிரச்னையாகவே இருந்து வருகிறது. இதனால், நதிநீர் இணைப்பு என்பது மிக சிக்கலான ஒரு திட்டமாக இன்று வரை கருதப்படுகிறது. ஆனால், நாட்டின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாநிலங்களையும் இந்த விஷயத்தில் ஈடுபட வைப்பது மத்திய அரசின் முக்கிய கடமையாக மாறிவிட்டது.

நன்றி : தினமலர்

Posted in |

0 comments: